நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

மேலத்திருப்பூந்துருத்தி இளைஞர்... சர்வதேச நடுவர்!

மேலத்திருப்பூந்துருத்தி இளைஞர்... சர்வதேச நடுவர்! ரமேஷ்குமார்... சர்வதேச அரங்கில் காலடி வைத்திருக்கும் தஞ்சாவூர் தமிழன். கடந்த வருடம் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேஸ்கட் பால் விளையாட்டின் நடுவர் இவர்தான். அதற்கு முன்னும் பின்னும் சர்வதேசப் போட்டிகளுக்கு நடுவராகப் பல நாடுகளுக்கும் பறக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி கிராமத்தில் ரமேஷ்குமாரைச் சந்திக்கப்போனால், அமைதியாக வரவேற்கிறது சர்வதேசக் கூடைப்பந்து நடுவரின் இல்லம். 

பள்ளிக்கூட நாட்களில் கிரிக்கெட்’ மீதுதான் ஆர்வம் இருந்தது. ஆனால், முழுமையான மனநிறைவு அதில் இல்லை. உடற்கல்வியில் பி.எஸ்சி., பி.பி.எட்., எம்.பி.எட்., சி.எஃப்.சி, பி.ஜி.டி.எஸ்.எம்., எம்.பில். படித்திருக்கிறேன். வாலிபால், கிரிக்கெட், ஃபுட்பால்... இப்படி எல்லா விளையாட்டுகளிலும் மாநில அளவில் விளையாடியிருக்கிறேன். கேப்டனாகவும் இருந்திருக்கிறேன். ஆனால், எனது அதிகபட்சத் திறமை வெளிப்படக்கூடிய ஒரு துறையைக் கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது. எனது நண்பர்கள் பெருமாள் மற்றும் பிரபாகரன் ஆகியோர்தான் எனக்கு பேஸ்கட்பால் விளையாட்டை அறிமுகம் செய்தனர். விதிமுறைகள், பயிற்சிகள் என ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டேன். பகுதி நேர வேலையாக தஞ்சாவூர் பள்ளிகள் சிலவற்றில் கைப்பந்து, பேட் மிட்டன், கோ-கோ, கூடைப்பந்து போன்ற விளை யாட்டுகளில் பயிற்சியாளராகவும் இருந்தேன். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே விளையாட்டுத் துறையைப்பற்றி விரிவான, முழுமை யான விழிப்பு உணர்வு இல்லை. 

விளையாட்டு வீரர், கோச் என்பதைத் தாண்டி, நடுவர் என்ற வேலையை யாரும் கண்டு கொள்ளவில்லை. நான் நடுவரைக் குறிவைத்து நகர்ந்தேன். 1996-ம் ஆண்டு, முதல்முறையாக மாநில கோ-கோ நடுவராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு, மாநில அளவிலான அத்லெடிக், கபடி, கைப்பந்து நடுவராகப் பல போட்டிகளில் செயல்பட்டு இருக்கிறேன். 2001-ம் ஆண்டில்தான் கூடைப்பந்து நடுவராகத் தேர்ச்சி பெற்றேன். சர்வதேச நடுவர் பணி 2006-ல் தொடங்கியது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்த நடுவர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று, மலேசியாவில் நடைபெற்ற ஆறு நாடுகளுக்கு இடையேயான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவராகப் பணிபுரிந்தேன். 

ஏற்கெனவே நிறைய அனுபவம் உண்டு என்பதால், என்னிடம் பதற்றம் ஏதும் இல்லை. சீனாவில் நடைபெற்ற 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டது எனது வாழ்வில் முக்கியமான நாட்கள். ஐந்து ஆண்கள் போட்டிகள், இரண்டு பெண்கள் போட்டிகள் என மொத்தம் ஏழு ஆட்டங்களுக்கு நான் நடுவர். இந்தியா பங்குபெறும் போட்டிகளில் மட்டும் நான் நடுவராகச் செயல்படக் கூடாது. பெண்கள் அணியின் இறுதிப் போட்டி சீனாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் சீனா ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நுணுக்கத்திலும் ஒழுக்கத்திலும் சீனா அணி மிகச் சிறப்பானது. நடுவராகச் செயல்பட, கட்டுப்பாடான உணவும் சீரான உடற் பயிற்சியும் முக்கியம். ஒரு போட்டியில், ஆட்டத்தையும் கவனித்துக் கொண்டு சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு ஓடவும் வேண்டும். அதனால், ஒரு விளையாட்டு வீரருக்கு இணையாக உடம்பைப் பராமரிப்பது அவசியம் எனச் சிரிக்கிற ரமேஷ்குமாருக்கு, விரைவில் திருமணம்! 
நன்றி: ஆனந்த விகடன்